Friday, December 29, 2017

Shirdi Sai Baba Night Arathi - Translated in Tamil - Lyrics



பாபாவின் ஆரத்தியை தினமும் பாடி, அவருடைய பாதங்களில் சரணடையும் பக்தர்களுடைய நெஞ்சத்தையும் மனத்தையும் உடலையும் பாபா வழிநடத்தி, அவர்களுடைய ஆத்மாவை, அவர்களுடைய நெஞ்சத்திலிருந்தும் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் வேறுபடுத்தி ஆத்ம அனுபவம் பெறச்செய்கிறார். இதனால், இம்மையில் இந்த பக்தர்களுடைய வாழ்க்கை அனுபவத்தரம் உயர்வதோடு, மறுமையில் இறைஞானம் பெற்று ஆன்மீகப் பிரபஞ்சத்தைக் கண்டு இறையுலகில் இனிது வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை.

~ உமாஸ்ரீதாஸன்.


*****

சீரடி ஸாயி பாபா - இரவு ஆரத்தி


மொழிபெயர்ப்பு: புலவர் நாக. சண்முகம்

பிரிவு - 1

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

உயிர்கள் அனைத்திலும் நிறைந்தவரே
தனித்தும் வாழ்கின்றீர்
உலகிலும் நிறைந்துள்ளீரே - உமக்கு
தீப ஆரத்தி சுற்றுகிறோம்

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

ராஜஸ தாமஸ ஸத்வ குணங்கள்
மாயையால் உருவானது - பின் அந்த
மாயையிலிருந்து எம்மை நீக்கி
குருபரா நீர் காக்கின்றீர்

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

ஏழு கடல் தனையும் உமது விளையாட்டுத் தலமாக்கி
உம் திருவிளையாடலை அதற்கு மேலும்
விரிவுபடுத்திய வித்தகரே

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்

கண்களுக்குக் காட்சிப் பொருளாய்
பெரிய உலகையே ஆக்கியவர்
கபடமில்லாத அருள்நோக்குடைய
ஸ்வாமியாம் ஸத்குருநாதா
என்று துக்காராம் கூறுகிறார்
தீப ஆரத்தி சுற்றுகிறோம்

ஸத்குரு ஸாயி நாதா ஆரத்தி சுற்றுகிறோம் - தீப
ஆரத்தி சுற்றுகிறோம்
பஞ்ச தத்துவ தீபங்களை ஆரத்தி சுற்றுகிறோம்.




பிரிவு - 2

ஆரத்தி ஞானராஜா சக்திக் கைவந்த ஒளியே
ஸாதுக்கள் கரங்குவித்து எப்போதும் உம்மைத் துதிக்க
ஆரத்தி ஞானராஜா

அனைவருடைய அஞ்ஞானத்தைப் போக்க
பாண்டுரங்கனாய் அவதரித்தீரே
ஆரத்தி ஞானராஜா

தங்கத் தட்டுக்களை கோபியர்கள் ஏந்த
நாரதரும் தும்புருவும் இன்னிசை பாட
ஆரத்தி ஞானராஜா

பிரஹ்மமாகிய ரூபம் தன்னை உணர்த்திய
ஜனார்தனா உமது பாதங்களை வணங்குவோம்

ஆரத்தி ஞானராஜா சக்திக் கைவந்த ஒளியே
ஸாதுக்கள் கரங்குவித்து எப்போதும் உம்மைத் துதிக்க
ஆரத்தி ஞானராஜா.



பிரிவு - 3

ஆரத்தி துக்காராமா ஸ்வாமி ஸத்குரு ரூபா
ஸச்சிதானந்த மூர்த்தி ஸ்வாமி ஸத்குரு தேவா
ஆரத்தி துக்காராமா

ஸேது பந்தனம் செய்த ஸ்ரீராமரைப் போல
மோக்ஷத்தின் பாதையை துக்காராமிற் கருளிய
ஆரத்தி துக்காராமா

பிரஹ்மத்தின் ரூபமே ஸாயி பாபா
எங்கும் நிறைந்தொளிரும் ஸாயி ஜோதியே

ஆரத்தி துக்காராமா ஸ்வாமி ஸத்குரு ரூபா
ஸச்சிதானந்த மூர்த்தி ஸ்வாமி ஸத்குரு தேவா
ஆரத்தி துக்காராமா.



பிரிவு - 3A

ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே

இவ்வுலகம் முழுதும் பொய்யால்
நிறைந்தது என்று நீரறிவீரே
இவ்வுலகம் முழுதும் பொய்யால்
நிறைந்தது என்று நீர் அறிவீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே

ஞானமற்றவர் குருடர்
எங்களுக்கு தரிசனம் தந்தருள்வீரே
ஞானமற்றவர் குருடர்
எங்களுக்கு தரிசனம் தந்தருள்வீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே

நாவு சோர்ந்து விட்டதினி என்ன செய்வேன்
என்று பணிகிறார் தாஸகணு மஹராஜ்
நாவு சோர்ந்து விட்டதினி என்ன செய்வேன்
என்று பணிகிறார் தாஸகணு மஹராஜ்
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே
ஸாயிநாதா உமதருளாலே - உம்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.



பிரிவு - 4

ஜய ஜய ஸாயிநாதா நித்திரை வேளை நேரமிது
ஏற்றுக்கொள்வீர் அன்போடு நாங்கள் செய்யும் ஆரத்தியை
ஜய ஜய ஸாயிநாதா

குழந்தைகள் எம்மை மகிழ்விக்கும் தாயே
இனிய சொற்களால் மகிழ்விப்பீரே
துன்பங்கள் நோய்களை நீரேற்று - உம்
பக்தரை விரைந்து காக்கின்றீர்

விரைந்தோடி வந்து எம்மைக் காக்கும் உம்மை
துயரங்களை ஏற்கச் செய்கின்றோம்
மலர் மஞ்சத்தில் அமர்ந்து பூஜைதனை
அருள்கூர்ந்து ஏற்பீரே

ஜய ஜய ஸாயிநாதா நித்திரை வேளை நேரமிது
ஏற்றுக்கொள்வீர் அன்போடு நாங்கள் செய்யும் ஆரத்தியை
ஜய ஜய ஸாயிநாதா

பஞ்சப் பிராணனே ஆரத்தியாகும்
அடியவர் பக்தியே நறுமணமாகும்
ஸாயியே உமது ஆசியே - அது
மஹாப்ரஸாதம் பக்தருக்கே

ப்ரஸாதம் ஏற்று வீட்டுக்குச் செல்வோம்
சென்றவர் மீண்டும் காலை வருவோம்
மஞ்சத்தில் அமர்ந்து பூஜைதனை
அருள்கூர்ந்து ஏற்பீரே

ஜய ஜய ஸாயிநாதா நித்திரை வேளை நேரமிது
ஏற்றுக்கொள்வீர் அன்போடு நாங்கள் செய்யும் ஆரத்தியை
ஜய ஜய ஸாயிநாதா
ஜய ஜய ஸாயிநாதா
ஜய ஜய ஸாயிநாதா



பிரிவு - 5

ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள் - ஸாயி
நித்திரை கொள்ளுங்கள்
இன்பமயமான சுகந்தரும் நிலையில் நித்திரை கொள்ளுங்கள்

நீர் படுக்கும் இடந்தனை வைராக்யம் என்னும் துடைப்பத்தால்
தினம் பக்தியுடனே சுத்தம் செய்தோம்
அதன்மீது அன்பு என்ற நீரைத் தெளித்தோம்
ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்

ஒன்பதுவித பக்தி என்ற விரிப்பினை உமது
பாதமலர்களுக் கடியில் வைத்தோம்
ஞானம் என்ற தீப ஜோதியை ஏற்றி வணங்குகிறோம்
ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்

இதயமதைக் கட்டிலாய் ஆக்கி இறைவா உம்மை அழைத்தோம்
மனம் என்ற மலர் விரிப்பால் படுக்கை செய்தோம்
ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்

இரண்டு மனத்தை ஒன்றாய் மாற்றி நாமொன்றாய் ஆனோம்
துர்புத்தி திசையை நீக்கி உம்மை அடைந்தோமே
ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்

ஆசைகள் ஏக்கங்கள் கற்பனைகள் நீங்கி பொறுமை சாந்தி என்ற
புண்ணியப் பெண்கள் பெருமை மிக்க உமக்கு சேவையை
தினமும் செய்கின்றார்
ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள்

பற்று அற்ற தியானம் என்ற மிருதுவான சால்வையை அணிவித்து
நெஞ்சம் நிறைந்த ஸத்குரு சயனம் நன்றே கொள்கின்றார்

ஸாயி நாதா பக்தி தூதா நித்திரை கொள்ளுங்கள் - ஸாயி
நித்திரை கொள்ளுங்கள்
இன்பமயமான சுகந்தரும் நிலையில் நித்திரை கொள்ளுங்கள்.



பிரிவு - 6

ப்ரஸாதத்தை ஏற்று நீங்கள் தூங்கச் செல்வீரே - நீங்கள்
தூங்கச் செல்வீரே

எங்கள் குற்றத்தைப் போக்கி பாபா துன்பத்தை மன்னித்து - எங்கள்
துன்பத்தை மன்னித்து
காத்தருள்வீரே பாபா - என்றும் காத்தருள்வீரே பாபா

ப்ரஸாதத்தை ஏற்று நீங்கள் தூங்கச் செல்வீரே - நீங்கள்
தூங்கச் செல்வீரே

நாங்கள் ஒன்றில் ஒன்றாய் ஐக்யமாக அருள்தர வேண்டுகிறோம் - பாபா
அருள்தர வேண்டுகிறோம் - உம்
உணவை ப்ரஸாதமாய்ப் பெற்று வீடு திரும்புகிறோம்

ப்ரஸாதத்தை ஏற்று நீங்கள் தூங்கச் செல்வீரே - நீங்கள்
தூங்கச் செல்வீரே.



பிரிவு - 6A

சீரடித் தலத்தில் வசிக்கும் ஸாயிநாத ஸ்வாமியே,
எமது விருப்பங்களை
 மங்களகரமாக நிறைவேற்றி அருள வேண்டும்.

உம்மைத் துதிக்கும் பக்தர்களை,
உலகமெங்கும் வியாபித்து ரட்சிப்பீரே
விஷஜந்துக்களின் தீண்டுதலிலிருந்து காத்து ரட்சித்து
மங்களம் உண்டாக அருள வேண்டும்.

உன் வடிவமாகவே நினைத்து உம்மைத் துதி பாடும் பக்தர்களுக்கு
முக்தி உண்டாகும் வழியைக் காட்டி
மங்களம் உண்டாக அருள வேண்டும்.

உண்மைகளின் தத்துவங்களை போதிக்கும் ஸாதுக்களுக்கு தினம் தினம்
மங்களம் உண்டாக அருள்புரிய வேண்டும்.

|| ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத மஹராஜ் கீ ஜய் ||


*****

சரணாகதி பிரார்த்தனை பணி - 

 https://lampofsurrender.blogspot.com/2018/09/surrender-prayer-service-tamil.html 

***

No comments:

Post a Comment